ஆள வந்த நாயகர்கள்
வீழ விட்டே படுகுழியில்
ஆட்சி செய்து அனுபவித்தார்
மீழா மடுவில் வீழ்ந்து விட்டோம்.
வேற்று மொழி ஆங்கிலமாம்
தூற்றி தள்ளி தூர வைத்தார்
பெற்ற பிள்ளை கள் மட்டும்
கற்று தேற வழி சமைத்தார்.
தீண்டா மொழி தமிழ் என
தள்ளி நின்று பேச வைத்தார்
பண்டாவின் பேரர் கூட
பற்றிக்கொண்டார் தமிழ் மகனை.
சிங்களமாம் சிறந்த மொழி
ஓங்கி ஒலித்தார் மேடை பேச்சு
இங்கிலாந்து சென்று நன்றாய்
இங்கிலீசும் கற்று தேர்ந்தார்
ஆனைக்காக அழுகின்ரார் தெரு
நாய்க்காக தேம்புகின்ரார்
ஆ அது பாவம் என்கின்றார்
அனைத்துயிரும் ஒன்றே என்றார்
மானுடம் போற்றும் போதி தர்மம்
மாசு செய்து போதித்தார் கர்மம்
வீணுக்கு வம்புகள் செய்தே
விதைத்தார் வேற்றுமைகள் பல.
சிங்கமென சீறுகிறார் உரு
சிறுத்த நாட்டினுள்ளே
அங்கமெல்லாம் மயிர் கூச
அடங்கினோம் உலக அரங்கில்.
இலவசமாய் எல்லாம் தந்து
இயங்காமல் செய்து விட்டார்
இல்லாமை சொல்லிக்காட்டும்
இழி நிலைக்குள் ஆளானோம்.
தேசப்பற்று பேசி பேசி
தேகம் எல்லாம் உணர்வு ஊட்டி
பாசம் கொண்ட தன் பிள்ளைதம்
பதிகின்றார் புலம் பெயர்த்து.
வீழ்ந்து கிடந்த வங்கம் கூட
வீராப்புடன் எழுந்து நிற்க
தாழ்ந்து தவித்து நிற்கிறோம்
தரணியிலே தரம் கெட்டு.