Translate

Pages

Monday, May 29, 2023

வீடும் திருமணமும்

 திருமணத்திற்கான தகுதியை பெற பெண் ஒருத்தி வீடு ஒன்றை கொண்டிருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கப்பட்டிருகிது. சமுகத்தில் புரையோடி போயுள்ள நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வினை. தீர்வு "பூனைக்கு மணி கட்டுவது யார்?" என்பதிலேயே தங்கியுள்ளது என்று சொல்லி விட முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மணி கட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றனர். பிரச்சினை புரையோடிப் போனது. இறுக்கமான முடிச்சு, வெட்டி எறிந்து விட முடியாதது. கயிறு அறுந்து கட்டமைப்பு வீழ்ந்து விடும் நிலை. முடிச்சு கழுத்தை இறுக்குகிது, நிதானமாக அவிழ்க்கப்பட வேண்டும், அவசரப்பட முடியாது.

இந்த பிரச்சினையில், பெண்ணை பொறுத்தவரையில் திருமணம் முடிக்கும் வரையில் தான் தலைமேல் பிரச்சினை. ஆணைப் பொறுத்த வரையில், சகோதரனாக, தந்தையாக, மாமாவாக, பெரிய/ சிறிய தந்தையாக, பாட்டனாக என பல படிகளில் தலையாய கடமை ஆக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பிரச்சினை ஆக்கப்படுவதற்கு பிரதான பின்னணி பெண்களே என்பது கசப்பான உண்மை.
பிரச்சினை, பெண்ணின் வீட்டில் ஆண் வாழ்வது அல்ல, மாறாக பெண்ணின் வீடு திருமணத்திற்கான நிபந்தனையாக ஆக்கப்பட்டிருப்பதே. அனந்தரமாகவோ, தன் உழைப்பினாலோ, அல்லது வேறு வழிகளாலோ பெண் சொத்துக்களை கொண்டிருப்பது இயல்பு. மனைவியின் சொத்துக்களை அவளது அனுமதியுடன் அனுபவிப்பதுவும், பரிபாலனம் செய்வதுவும் தப்பாக இருக்க முடியாது. அவளது மரணத்தின் பின் அவனுக்கும் பாகம் உண்டு என்பதுவும் நியதி. முதலில் பெண்ணின் வீட்டில் வாழ்வது குறித்த தப்பபிப்பிராயம் களையப்பட வேண்டும்.
திருமணத்திற்கான நிபந்தனையாக பெண்ணின் வீடு நிர்ணயம் செய்யப்படுவதால் சமூக, பொருளாதார, ஆன்மீக பிரச்சினைகளை தமக்கு தாமே விதித்து வினையாக்கி கொண்டுள்ளது சமுதாயம்.
பெற்றோருக்கு நியம வாரிசு ஆண்மகன். வயோதிப பெற்றோரை போசித்து பராமரிக்கும் கடமையும் உரிமையும் அவனையே சாரும். அவனது ஊழைப்பில் வாழும் உரிமை பெற்றோருக்கு உரியது. ஆனால், பெண் வீட்டில் வாழ நிர்ப்பந்திக்க படும் அவன் பெற்றோரை தமது நிழலின் கீழ் கொண்டு வருவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. வேறொரு ஆணின் பராமரிற்குள் தள்ளப்படும் பெற்றோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். வாழ்நாள் முழுவதும் சேர்த்த அனைத்தையும் வேறொரு ஆணிடம் பறி கொடுத்து தான் கட்டிய வீட்டுக்குள் ஒரு மூலையில் ஒதுங்கி வாழும் துரதிஷ்டம் நமக்கு நாமே விதித்துக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
உடன் பிறந்த சகோதரிகளுக்கு மாடமாளிகைகள் கட்டிய ஆண்மகன், தனக்கென ஒரு குடிசையையாவது கட்டிக்கொள்ள முடியாமல் போன துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
தனக்கென, தான் திருப்திபட்டுக் கொள்ளும் வகையில், தனது உழைப்பிற்கு ஏற்றாற் போல் அளவான வீடொன்றினை அமைத்து உரிய காலத்தில் வாழ்கையை ஏற்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பத்தினை சிதைத்து, யார் யாரையோ திருப்தி படுத்த வேண்டி தேவையை தாண்டிய அநாவசிய அலங்கார வீடுகளுக்காக உழைத்து தேய்ந்து போகும் துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
ஊரில் அடுக்கு மாளிகைகளில் புறாக்களுக்கும் சிலந்திகளுக்கும் வாழிட வசதி செய்து, வெளிநாடுகளில் ஆறு சுவர்களுக்குள் அடைக்கலம் தேடும் துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் சடங்கு சிக்கலின் வினை.
கடமைகளை விஞ்சி சடங்குகளிற்கு முன்னுரிமை கொடுக்கும் சமுதாயம் கடமைக்கும் சடங்கிற்கும் வித்தியாசத்தினை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடமை என்பது இவ்வாறு தான் என படைத்தவனால் விதிக்கப்பட்டது. அது ஈருலக ஈடேற்றம் தரக்கூடியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அது அவனுக்கு நான் அடிமை என்பதை வெளிப்படுத்துதாக அமைகிறது. அதாவது, அவனது கட்டளையை அப்படியே அடியொற்றி கடைப்பிடிப்பது வணக்கம்.
சில வேளைகளில் கடமையுள் முகஸ்துதியும் பெருமையும் கலக்கும் போது சடங்காக ஆகுவதுண்டு. அந்த அமல்களை முகத்தில் சுருட்டி வீசுவதாக இறைவன் கூறுகிறான்.
கட்டளையிடப்படாத ஆனால் நாம் நற்காரியம் என கருதும் செயல்கள் கூட கடமையாக கருதப்படும் போது, அதாவது "நான் அவனுக்கு அடிமை" என்ற நிலையியை கேள்விக்குள்ளாக்க கூடியது. அதையே இஸ்லாம் பித்அத் எனும் வழிகேடு என வரையறுக்கின்றது.
கடமைகளுக்கும், நல்லவை என நாம் கருதுபவற்றிற்குமே இந்த நிலை என்றால், சமுதாயத்திற்கு பயந்து அமல்களுக்கு மேலான இடத்தில் வைத்து நாம் அரங்கேற்றும் சீர்கேட்டு சடங்குகள் குறித்து பேச தேவையில்லை.
ஆகவே, இந்த வீட்டு பிரச்சினை உட்பட்ட கடமைகளை தாண்டி நாம் முன்னுரிமை கொடுக்கும் அனைத்து சடங்குகளில் இருந்தும் சமுதாயம் என்ற ரீதியில் நாம் விடுபட வேண்டும். அதன் மூலம் நாம் நமக்கே விதித்து கொண்ட ஆன்மீக, பொருளாதார, சமூக சிக்கல்களில் இருந்து விடுபட வல்ல நாயன் நேர்வழி காட்டட்டும்.

No comments:

Post a Comment